Monday, November 17, 2014

ஒரு பொழுது விடிகிறது

ஒரு பொழுது விடிகிறது



முகாம்களில் முகம் தெரியா
எம் குடிசைகளின்
வாயில் வழியே
ஒரு பொழுது விடிகிறது

எம் கூரைக்கிழிசல்களுக்குள்
ஆங்காங்கே சிறு வெளிச்சங்கள்
எம் பெண்கள் சேலையிலும்….
அது வெளிச்சமல்ல
ஒரு வரலாற்றின் ஆதாரம்

முக்காடிட்ட முகாம்களுக்குள்
எம் மூதாதையர்கள்
காற்றும் கூட
அங்கு திசை மாறுகிறது…
வெறிச்சோடிப்போன
ஒரு பொழுது……….

அலைக்கழிக்கப்பட்டோம் ஐயா!!
“அகதி” என்ற போர்வையில்……..
அழுகின்றோம் ஐயா!!
ஊர்கள் இல்லாமல்
வியர்வையில்……….

யோகம் வரும் என்பதினால்
மோகம் கொள்ளவேயில்லை
மோகம் கொள்ளவுமில்லை
இங்கு யோகம் வரவுமில்லை

ஒற்றைக் கூரையில்
ஓர் விளக்கு
காற்றும் சுற்றுது
அதையும் அணைக்க

பட்டெரிய நாங்களொன்றும்
பாவிகள் இல்லை
பாவப்பட்டவர்கள்
பரிதவிக்கும் எங்களிடம்
அகோரக் கேள்விகள்

வீழ்ந்த செல்களில்
சிதறியது எம்முயிர் ….
ஆழ்ந்த துயரங்களில்
பதறியது எம்மனம்….
சேர்ந்துகொண்டோம் சோர்வதற்கு

வால் வெள்ளியான வாழ்க்கை…
“வாழ்ந்து கெட்டவர்” என்ற நாமம்
கார்மேகமும்
குண்டு மழை பொழிகிறது…
இரும்புத்தொப்பிகளும்
உலோகப்பறவையின்
குண்டு எச்சங்களும்
சித்திரவதை செய்கிறது

கப்பம் என்ற பெயரில்
கர்ப்பம் தரிக்க வைத்தனர்
அழுகின்ற குழந்தைக்கு
ஒரு “புல்லட்” போதும் என்கின்றனர்

படிக்கப்போனவர்கள்
பள்ளியோடு படுத்துறங்கினர்
மிஞ்சிய உயிர்களெல்லாம்
உதறியோடுகின்றன

அகதி என்ற பெயர் வைத்தே
அதிகாரம் பண்ணுகின்றனர்
ஆத்திரமடைந்தால்
போதும்
ராத்திரிக்குப்போட்டுத்தள்ளுவர்

காத்திரமாய் நானும்  தான்
கண்டதில்லை யாரும் தான்
பாத்திரமாய் இருக்கத் தான்
விட்டதில்லை யுத்தம்  தான்

சோற்றுக்காய் உப்பேதும்
வாங்வில்லை நாமும் தான்
ஒரு கை சோற்றுடன்
துளிக்கண்ணீர் போதுமென்ற
நோக்கம் தான்

பட்டாடை வேண்டுமென்றால்
பத்தாடை வாங்க வேண்டும்
பட்டு மாண்டபின்பெமக்கு
பசிக்க மட்டும் செய்கிறது

“அடுத்தது என்ன?” என்று
நேற்று நினைத்தே இன்றானது
நாளையை நினைக்க என்க்கு
நாழிகை வருமா
என்றானது

இந்தக்காற்றும் எம்பக்கம் வீசும்
போலிருக்கு
கொஞ்ச நஞ்ச தன்னம்பிக்கை தானிருக்கு
வீண்கோபம் இனி ஏன் எனக்கு
கைகொடுக்க உற்றவர் பேரிருக்கு

ஒருசத சல்லியேனும்
சேர்த்து வைக்க முடியவில்லை
வயது வந்த பாவைக்கு
நல்ல சேதி அருகிலில்லை


இத்தனையும் எம் கண்களில் வந்து
தூங்காத எம் நாட்களாக
ஒரு பொழுது விடிகிறது
ஒவ்வொரு நாளும் அது தொடர்கிறது

தொடர்கின்ற இவ்வலி
நினைத்தே நாம்
செல்கின்ற பாதை மறந்தோம்
வருகின்ற காலத்தினுள்
எம் வாழ்வைத் துறப்போம்

Monday, April 21, 2014

திண்ணம்

வாழ்க்கை முழுவதும் முற்கள்
தைக்கும் கால்களுக்குள்ளும்
இரத்த காவியங்கள்
காதலாய் மலர்ந்தது எனக்குள்

பார்த்ததும் படபட வென
பரிதவித்தது இந்த
பாவி நெஞ்சம்
பார்த்தேன் பாசம் தூவிய
பார்வையாலே

என்னது நியாயம்
பொன்னது போல
பெண்ணது நெஞ்சம் மட்டும் கிடைப்பது
திண்ணம் என்றானதே..................